( மின்மினி மின்ஹா )
மா மரச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முகாமைத்துவ நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (27) நடைபெற்றது.
மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி. திஸ் நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர்கள் எஸ். கோகுல்ராஜ், என். ஜெகதீஸ்வரன், விவசாய போதனாசிரியர்கள், விவசாய தொழில்நுட்ப உதவியாளர்கள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாயக் கற்கை மாணவ, மாணவிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் போது மா மரச் செய்கையில் நிலத் தெரிவு முதல் அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவம் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் செயன்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன. அதில் குழி அமைத்தல், பசளைப் பயன்பாடு, களைக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், கத்தரித்தல் மற்றும் பராமரிப்பு, பெக்டோபியூட்டசோல் பயன்பாடு, மாங்காய்களுக்கு பொதியிடல், ரொக்கிங் ஸ்பிரேயர் பயன்பாடு, அறுவடை மற்றும் களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மா மரச் செய்கையில் அறிவியல் ரீதியான நவீன முகாமைத்துவ முறைகளை விவசாயிகள் மத்தியில் பரப்புவதற்கும், தரமான விளைச்சலை அதிகரிப்பதற்கும் இந்நிகழ்வு முக்கிய பங்களிப்பை வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




