சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள மக்கள் நலன்சார் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்த "முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்" (Progress Review Meeting) (25) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திட்டமிடல் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டம், மாகாண அபிவிருத்தி கட்டுறுத்து நிதி வேலைத்திட்டம், ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம், மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட போஷாக்கு முத்திரை வழங்கும் திட்டம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, ஒவ்வொரு திட்டத்தினதும் கள நிலவரங்கள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட விடயப் பொறுப்பு உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்த பிரதேச செயலாளர், மக்கள் நலன்சார்ந்த இவ்வேலைத்திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் எவ்விதத் தொய்வுமின்றி, மிகத் தரமான முறையில் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் நிதி உதவியாளர் எஸ்.எம். நாவாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். ரிஸ்வான், பொறுகை உத்தியோகத்தர் ஆர்.எம். றிபாஸ் ஆகியோருடன் விடயப் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் எனப் பல முக்கிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது துறைசார்ந்த விளக்கங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.




