தகவல் - Mohamed Firos.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட அன்னதான (தன்சல்) நிகழ்வு இன்று (ஜூன் 01) நிலைய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டில் நிலவும் சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையிலும், இப்பகுதி மக்களின் நல்வாழ்வை வேண்டியும் இந்த அறப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஆரம்பமான இந்த தன்சல் நிகழ்வில், சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் எனப் பலருக்கும் குளிர்குடிபானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. சாதி, மத, பேதங்களைக் கடந்து அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து இதில் பங்கெடுத்தமை ஒரு சிறந்த சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில், நிலையத்தின் அனைத்து மட்ட ஊழியர்களும் இணைந்து நிதி மற்றும் உடல் உழைப்பை வழங்கி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.




