மஜீட். ARM
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை-03 பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க, 4 வயதுடைய குழந்தையின் தாயான பாத்திமா அனுஷா (மறுபெயர் சிப்னா) என்பவரே தனது வீட்டில் கடந்த (23) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதுடன், தற்கொலைக்கான காரணம் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மரணத்திற்கான பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
(#விழிப்புணர்வுச்_செய்தி)
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சோதனைகள் அல்லது மன அழுத்தங்கள் எதுவாக இருந்தாலும், தற்கொலை ஒருபோதும் அவற்றுக்கான தீர்வாகாது.
ஒரு கணத்தில் எடுக்கும் தவறான முடிவுகள் குடும்பத்தினரையும், குறிப்பாக பிஞ்சுப் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மீளாத் துயரத்திற்குள்ளாக்கிவிடும். எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மனதை தளரவிடாமல், உங்களது கவலைகளைப் பேசித் தீர்க்க நம்பகமானவர்களிடம் அல்லது குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் உயிரும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலமும் மிக விலைமதிக்க முடியாதவை.

