Ads Area

சம்மாந்துறைக்கு சிவில் நீதிமன்றம் அவசியமான தேவை: பிரதேச சபை உறுப்பினர் காலித் சபையில் முழக்கம்!

சம்மாந்துறை பிராந்திய மக்களின் நீண்டகாலத் தேவையாக இருக்கும் சிவில் நீதிமன்றக் கோரிக்கைக்கு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த நியாயமான கோரிக்கைக்கு அவர் 'பச்சைக்கொடி' காட்டியுள்ளார்.


சம்மாந்துறை மக்களின் சிவில் வழக்குகள் தற்போது கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய நீதிமன்றங்களிலேயே நடைபெற்று வருகின்றன. இதனால் சாதாரண பொதுமக்கள் போக்குவரத்துச் செலவுகள், நேர விரயம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிரமங்களைக் கருத்திற்கொண்டு, சம்மாந்துறையில் சிவில் நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான முறையான நடவடிக்கைகளை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, அண்மையில் சம்மாந்துறை பிரதேச சபையிடமும் அவர்கள் இதற்கான அங்கீகாரத்தைக் கோரியிருந்தனர்.


சபை அமர்வில் முழு ஆதரவு.


நேற்று (07) நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபையின் அமர்வின்போது, உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் இது தொடர்பான அறிக்கையை முழுமையாக ஆதரித்து உரையாற்றினார்.


அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:


"சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் எமது பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ள 'சம்மாந்துறையில் ஒரு சிவில் நீதிமன்றத்தை நிறுவ வேண்டும்' என்ற மிகவும் நியாயமான கோரிக்கைக்கு எனது முழுமையான ஆதரவை இந்த உயரிய சபையில் பதிவு செய்து கொள்கின்றேன். எமது மக்கள் ஒரு சாதாரண சிவில் வழக்கிற்காகக் கூட கல்முனை நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நீதியைப் பெறுவதற்காக ஒரு முழு நாளை செலவிட வேண்டியுள்ளதுடன், அன்றாட வருமான இழப்பு மற்றும் குடும்பச் சிரமங்கள் எனப் பல்வேறு இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்."


2.5 இலட்சம் மக்களின் தேவை.


தற்போது சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு மற்றும் நாவிதன்வெளி (சொறிக்கல்முனை 1, 2, 3 நிர்வாகப் பிரிவுகள் உட்பட) ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும், சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு மற்றும் சவளக்கடை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இந்த நான்கு நிர்வாகப் பிரிவுகளிலும் இன்று சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய உறுப்பினர் காலித், இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பிராந்தியத்திற்கு இதுவரை ஒரு சிவில் நீதிமன்றம் இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம் என்றார்.


தூரமும் துயரமும்.


வளத்தாப்பிட்டியிலிருந்து கல்முனை நீதிமன்றத்திற்குச் செல்ல சுமார் 25 கிலோமீற்றரும், அட்டப்பள்ளத்திலிருந்து செல்ல சுமார் 20 கிலோமீற்றரும் பயணிக்க வேண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.


"இந்தத் தூரம் வெறும் கிலோமீற்றர் கணக்கல்ல. இது ஒரு முதியவரின் சிரமம்; ஒரு தொழிலாளியின் வருமான இழப்பு; ஒரு பெண்ணின் பாதுகாப்பு குறித்த கவலை; நீதியை நாடும் எளிய மக்களின் அன்றாடப் போராட்டம்" என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.


பிராந்திய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.


சம்மாந்துறை இன்று மக்கள் தொகை, கல்வி, வர்த்தகம் மற்றும் நிர்வாக முக்கியத்துவம் ஆகிய அனைத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு முக்கிய பிராந்திய மையமாகும். இங்கு ஒரு சிவில் நீதிமன்றம் நிறுவப்படுவதன் மூலம் இரண்டரை இலட்சம் மக்களுக்கு நீதி எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும். அதுமட்டுமன்றி, நகரின் பொருளாதார வளர்ச்சி, புதிய முதலீடுகளின் வருகை, அரச சேவைகளின் விரிவாக்கம் மற்றும் பிரதேச சபையின் வருமான உயர்வு ஆகியவற்றிற்கும் இது உறுதுணையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


வரலாற்றுத் தீர்மானத்திற்கு அழைப்பு.


"இன்று நாம் நிறைவேற்றவுள்ள இந்தத் தீர்மானம் ஒரு சாதாரண தீர்மானமாக இருக்கக் கூடாது. இது சம்மாந்துறை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு நாம் வழங்கும் ஆதரவாக, நீதியை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைய வேண்டும்" என்று குறிப்பிட்ட உறுப்பினர் காலித், சபையிலுள்ள அனைத்து கௌரவ உறுப்பினர்களும் அரசியல், இன, மத வேறுபாடுகளைக் கடந்து, சம்மாந்துறை மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டார்.


- கியாஸ் ஏ. புஹாரி






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe