Ads Area

இளைஞர்களுக்கு ஐஸ் வினியோகம் - ஐஸுடன் இளைஞன் கைது.

 பாறுக் ஷிஹான்.


நிறுத்தல் தராசு, மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, பிளாஸ்டிக் குழாய் என்பன பொலிஸாரால் மீட்பு - நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த 32 வயதுடைய நபரொருவர் இன்று (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி என்.றிபாய்டீனுக்குக் கிடைத்த இரகசியத்தகவலுக்கு அமைவாகவே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைதான சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்திற்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரைக்கமைவாக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe