குவைத் நாட்டின் ஹவாலி ஆளுநரகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து மொத்தம் 37 பொட்டலங்கள் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குவைத் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு இயக்குநரகத்தின் ரோந்துப்படையினர் அப்பகுதியில் வழக்கமான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இரு நபர்கள் திறந்தவெளிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் எதையோ தோண்டித் தேடிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைக்காக அதிகாரிகள் அவர்களை அணுகியபோது, சந்தேக நபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
எனினும், அவரை பின்தொடர்ந்து சென்ற பாதுகாப்புப் படையினர் குறித்த நபரை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
தொடர்ந்து இரு சந்தேக நபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மொத்தம் 37 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில், முதலாவது நபரிடமிருந்து 27 பொட்டலங்களும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குவைத் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் இரு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரால் தொடர்ச்சியான சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




