Ads Area

சம்மாந்துறை உடங்கா 1, 2 கிராம சேவகர் பிரிவுகளில் S-24 வாய்க்காலினை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பம்.

 தில்சாத் பர்வீஸ்.


சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வாகனங்களின் உதவியுடன், உடங்கா 1 மற்றும் உடங்கா 2 கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட S-24 வாய்க்காலை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (09) முன்னெடுக்கப்பட்டன.


சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகானின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இப்பணிகளின்போது, வாய்க்காலில் காணப்பட்ட கழிவுகள், புதர்கள் மற்றும் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த தடைகள் அகற்றப்பட்டன.


இப்பணியின் மூலம் குறித்த பகுதியில் நீர்ப்பாசன வசதிகளைத் தடையின்றி வழங்குவதுடன், சுற்றுச்சூழல் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகான், “இந்த வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியின் மூலம் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சுத்தமானதும் சுகாதாரமானதுமான சூழலை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறோம்.


குறிப்பாக, விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகள் இனிவரும் காலங்களில் எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்யப்படுவதற்கு இந்நடவடிக்கை உதவியாக அமையும். எதிர்காலத்திலும் இப்பகுதியில் உள்ள நீர்ப்பாசனப் பாதைகளை முறையாகப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


அத்துடன், இப்பணியை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிய சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe