தில்சாத் பர்வீஸ்.
மக்களுக்கான சேவையை பொலிஸ் சீருடையுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், ஓய்வுக்குப் பின்னரும் சமூகத்துடன் இணைந்து மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வரும் ஓய்வுபெற்ற பிரதம பொலிஸ் பரிசோதகரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எஸ். அப்துல் மஜீத் கௌரவிக்கப்பட்டார்.
மனித உரிமைகள் அமைப்பு லங்கா (Human Rights Organization Lanka) அமைப்பின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூகத்தின் பல்வேறு தரப்பினருடன் இணைந்து மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதிலும் எம்.எஸ். அப்துல் மஜீத் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு விசேட கௌரவம் வழங்கப்பட்டது.
நீண்டகால பொலிஸ் சேவையின் ஊடாக பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய அவர், ஓய்வுக்குப் பின்னரும் சமூக நலன் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதாக நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
International Human Rights Organization Sri Lanka அமைப்பின் தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் அல்-ஹாஜ் டாக்டர் எம்.என்.எம். அஸீம் JP தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் வை.ரஷீத் மற்றும் அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுஹான் நந்தநாயக்க ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம், சமூகப் பொறுப்பு, மனிதாபிமான சேவையின் முக்கியத்துவம் மற்றும் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சமூக சேவையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவிப்பது, எதிர்காலத்தில் மேலும் பலரை சமூகப் பணிகளுக்கு ஊக்குவிக்கும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

