மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் இன்று (12.09.2026) நடைபெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். சாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம். ரிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 27 மருத்துவ உதவிகளையும், 20 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலும், உரிய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து இம்மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.
இத்தகைய மக்கள் நலப் பணிகள் எதிர்காலத்திலும் தொடரவும், சம்மாந்துறை பிரதேச மக்கள் இதன் பலன்களை முழுமையாக பெற்றுக் கொள்ளவும் இந்தச் சாதனை ஒரு மைல்கல்லாக அமைகின்றது.



