மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை அல்-அர்சத் பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவ சங்கத்தினரின் இப்தார் நிகழ்வு ஒன்று அண்மையில் மாணவ சங்கத் தலைவர் அக்ரம் முஹம்மட் தலைமையில் வெகு சிறப்பாக பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அல்-அர்ஷத் பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் பாடசாலை நிர்வாகத்தினரோடு பயணித்து தங்களால் ஆன பங்களிப்புக்களை பாடசாலைக்கு வழங்கும் நோக்கில் சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்டது.
இப் பழை மாணவர் சங்கத்தின் முதற்கட்டப் பணியாக பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஏனைய பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னைய நிர்வாகத்தினர்கள் போன்றோர்களுக்கு இடையில் ஒரு பரஸ்பர சிநேனபூர்வமான சந்திப்பை ஏற்படுத்தும் நோக்கில் இவ் இப்தார் நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும் என பல அறிவுரைகள் வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களாலும், ஆசிரியர்களாலும் உரை நிகழ்த்தப்பட்டதோடு பழைய மாணவ சங்கத் தலைவர் அக்ரம் முஹம்மட் அவர்களாலும் அல்-அர்ஷத் பாடசாலையின் தற்போதைய நிலை, அதன் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய பங்களிப்புக்கள் போன்றன பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.