Ads Area

ஊடக சந்திப்பில் மனம் நோகும் அளவுக்கு கண் கலங்கிய 77 வயதான காமினி ஜயவிக்ரம பெரேரா.


அன்சார் - சம்மாந்துறை.

பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலமையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் மீது மிளகாய் தூள் கலந்த நீரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜயவிக்ரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தூவி அவமானப்படுத்திய செயல் பல தரப்பினராலும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

77 வயதான கௌரவம் கொடுக்க வேண்டிய ஒரு மனிதரை கேவலப்படுத்தும், நாரடிக்கச் செய்யும் கேடு கெட்ட வேலையை சிலர் பாராளுமன்றத்தில் அரங்கேற்றிருந்தனர்.


காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் 1994ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 24 வருடகால பாராளுமன்ற அரசியல் அனுபவத்தை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதியாக பலராலும் மதிக்கத் தக்கவராகவே இருந்து வந்துள்ளார். இவர் 6 தடவைகள் தொடச்சியாக இலங்கை பாராளுமன்றத்திலும், வடமேல் மாகாண முதலமைச்சாராகவும் பதவி வகித்து வந்த வயதில் மூத்த மரியாதைக்குரிய நபராவார் ஆனால் அவரது வயதையும், முதுமையையும் மதிக்காமல் பாராளுமன்றத்தில் சிலர் அவரது கண், முகம் போன்ற இடங்களில் மிளகாய்த் துாள் கலந்த நீரை விசிரியடித்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் கண் எரிச்சலுக்கு ஆளான அவர் அந்த கண் எரிச்சலோடே  மிகவும் மனம் நொந்த வண்ணம் கண் கலங்கியவாறே ஊடகங்களை சந்தித்திருந்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் மக்களுக்காக சேவையாற்ற மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் சிலர் தங்களது காட்டுமிராண்டித் தனத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலையத்தளங்களில் மக்கள் காரசாரமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe