கல்முனையில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை.
நன்றி கல்முனை மேயர் ஊடகப் பிரிவு.
தற்போதைய டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் (டியூசன்) நடத்தப்படுவது, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தலை மீறி டியூசன் வகுப்புகள் நடத்தப்பட்டால், குறித்த டியூட்டரிகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஆனால் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற தனியார் கல்வி நிலையங்கள், இவ்விடுமுறை காலத்திலும் டியூசன் வகுப்புகளை நடாத்தி, மாணவர்களின் ஓய்வுக்கு குந்தகம் விளைவிக்கின்றன. இது தொடர்பில் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கோவில்கள், சமூக அமைப்புகள் போன்றவையும் பெற்றோர்கள் தரப்பிலும் தம்மிடம் விடுத்திருக்கும் கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களின் நலன் கருதி, இக்காலப்பகுதியில் எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் டியூசன் வகுப்புகளுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளேன்.
இதன் பிரகாரம் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் தரம்-1 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு எவ்வித டியூசன் வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை விடுக்கின்றேன். இதனை மீறி செயற்படும் டியூட்டரி உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
இத்தடையை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொருட்டு எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன்போது எமது அறிவுறுத்தலை மீறி செயற்படும் டியூட்டரிகள் கண்டறியப்பட்டு, அவை வியாபார உரிமம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தின் நிமித்தம் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் எதிர்காலத்தில் குறித்த டியூட்டரிகள் யாவும், மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றனவா என்பது தொடர்பில் மாநகர சபையினால் பரிசோதிக்கப்படுவதுடன் மாநகர சபையில் பதிவு செய்யப்பட அனைத்து டியூட்டரிகளும் பொதுவான ஒரு கொள்கைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைப்பு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
ஆகையினால் நமது மாணவர் சமூகத்தின் நலன்களை கருத்தில் கொண்டு எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு டியூட்டரி உரிமையாளர்களிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று முதல்வர் றகீப் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
நிந்தவூரில் டிசம்பர் 17ம் திகதி முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!
நன்றி - நிந்தவூர்டுடே செய்திப்பிரிவு
நிந்தவூரில் டிசம்பர் 17ம் திகதி முதல் பாடசாலை ஆரம்பிக்கும் காலம் வரை தனியார் வகுப்புகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஆஷிக் அலி (காஷிபி) சற்றுமுன்னர் நிந்தவூர் டுடேய்க்குத் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ;
1. மாணவர்களின் டிசம்பர் விடுமுறையை ஒழுங்கு படுத்தும் விதத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பாடசாலை ஆரம்பிக்கும் காலம் வரை ஊரிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களும் கட்டாயமாக நிறுத்தப்படுதல்.
2. அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் மலசலகூட வசதி களையும் ,நீர் வசதிகளையும் மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொடுத்தல்.
3. தனியார் கல்வி நிறுவனங்கள் தமது சுற்றுப்புறச் சூழலை ஒழுங்காக வைத்திருப்பதோடு மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுத்தல்.
4.பாடங்களுக்கு மாணவிகள் வருகிறபோது பாடசாலை உடையிலேயே வருவதனை கட்டாயப்படுத்தல்.
இந்த முடிவுகளோடு இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல்படுத்துவதில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், குறிப்பிட்ட விடயங்களை கண்காணிக்க பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஆஷிக் அலி (காஷிபி) தெரிவித்தார்.
(படங்கள் உதவி : தவிசாளரின் ஊடகப்பிரிவு)