ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்ற மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுனர் லெப்டினன் கேர்ணல் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல் தென் சூடான் பயணம்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சைகளை செய்து சத்திர சிகிச்சைத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்திய மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுனர் லெப்டினன் கேர்ணல் டாக்டர் சித்தீக் ஜெமீல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டு தென் சூடான் நாட்டுக்கு கடந்த (15) பயணமானார்
1975-02-26ல் மருதமுனையில் பிறந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார் ஸ்ரீ ஜவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் கற்று 2002 ல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து கொழும்பு போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்து 2004ல் வைத்திய அதிகாரியாக நியமனம் பெற்றார்.
பின்னர் மயக்கும் வைத்திய அதிகாரியாக நியமனம் பெற்று அவிசாவளை வைத்திய சாலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது சத்திர சிகிச்சையில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக பல வைத்திய சாலைகளில் ஆறு வருடங்கள் பணியாற்றி அதற்கான பயிற்சியைப் பெற்று சத்திர சிகிச்சை நிபுனருக்கான பட்டத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் லன்டனுக்குச் சென்று இரண்டு வருடங்கள் சத்திர சிகிச்சை தொடர்பில் எம்.ஆர்.சி.பட்டத்தைப் பெற்று மீண்டும் நாடு திரும்பி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றினார். இவர் இலங்கை இராணுவத்தில் இராணுவ அதிகாரியாக இணைக்கப்பட்டு லெப்டினன் கேணல் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இணைந்து அங்குள்ள மக்களுக்கும் சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளார். வறிய மக்கள் மீது மிகவும் அன்பு கொண்டுள்ள இவர் பல சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் மருதமுனையைச் சேர்ந்த சித்தீக் சுஹறா தம்பதியின் புதல்வராவார்.
ஏரூர்-அஹமட்