திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்த சம்பவம் தொடர்பில் 5 அரச அதிகாரிகளின் பதவியைத் தடை செய்யுமாறு, ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.
திஸ்ஸமகாரம, ஜியாஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த மலித் வீரசிங்க எனும் 11 மாதக் குழந்தையே கடந்த மே மாதம் 14ஆம் திகதி உண்ண உணவில்லாமல் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.
இக் குழந்தைக்கு மேலும் மூன்று சகோதரர்கள் காணப்படுகின்றனர். என்றாலும் குறித்த குடும்பத்திற்கு சமூர்த்தி திட்டத்தை வழங்க, பிரதேச சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுத்தபோதும், குடும்பத் தலைவரான குழந்தையின் தந்தை சமூர்த்தி திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காதன் காரணமாக அதனை வழங்க முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.