முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டுமாறு அத்துரலியே ரத்ன தேரருக்கு, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சதொச வாகனங்கள் பயன்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறையிட்டிருந்தேன்.
அன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டிருந்தேன். எந்தவொரு பிழையும் நான் செய்யவில்லை. உண்மை வெல்லும்.
எனக்கும் அல்லது எனது குடும்பத்தாருக்கும் 3000 ஏக்கர், 7000 ஏக்கர் என்று காணிகள் இருப்பதாக அண்மைக்காலமாக சிலர் கூறிவந்தனர். இறுதியாக 8000 ஏக்கர் வரை அந்த எண்ணிக்கை சென்றது. ஆனால் அவ்வாறு எனக்கு எந்தவொரு காணியும் இல்லை. நான் வளைத்துப்போட்டதாக கூறப்படுகின்ற காணிகள் இவ்வாறு இருந்தால் அவற்றை அரசுடைமையாக்குமாறு நானே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக கூறியிருக்கின்றேன். வில்பத்து வனவிவகாரத்தில் ரத்தன தேரர் பல வருடங்களாக இதனை கூறிவருகின்றார்.
எமக்கு அமைச்சுப் பதவிகள் பெரிதல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் பதவிகளை ஏற்கும்படி கூறினார்கள். ஆனாலும் ஜனாதிபதியும், பிரதமரும் முழு நாடுமே நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை அறிவார்கள்” என கூறியுள்ளார்.