வாகன ஓட்டுநர் மற்றும் க்ளீனர் கனரக வாகனங்களை ஓட்டும்போது லுங்கி கட்டியிருந்தால் அபராதம் விதிக்கும் விதிமுறையை ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக நோக்கத்திற்காக இயக்கப்படும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்கள், நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏதுவாக லுங்கி மற்றும் சட்டை அணிந்து செல்வது வழக்கம். இப்போது, லுங்கி அணிந்து வாகனம் இயக்குவது போக்குவரத்து விதிமீறல் என்று அபராதம் விதிக்கத் தொடங்கியிருக்கிறது உத்தரபிரதேச காவல்துறை.
இது குறித்து விளக்கமளித்துள்ள உத்தரப்பிரதேச ஏஎஸ்பி பூர்னேந்து சிங், வாகன ஓட்டுநர்கள் அணியும் உடை குறித்த ஒழுங்கு முறை கடந்த 1939ம் ஆண்டு முதலே மோட்டார் வாகனச்சட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த சட்ட விதிமுறையை கடந்த 1989ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டதோடு, விதிமுறையை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்தது. இந்த சட்டத்திருத்தம் மீண்டும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு மோட்டார் வாகனச்சட்டம் 179ம் பிரிவின் கீழ் அபராதத்திற்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விதிமுறை பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை பரவலாக்கும் படியும், விதிமுறைகளை பின்பற்றாதவர்களை அதை பின்பற்றுவதற்கு பழக்கும்படியும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்ட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் படி கனரக வாகன ஓட்டுநர், ட்ராக்டர் ஓட்டுநர் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் இலகுரக வணிக வாகன ஓட்டுநர்கள் யாரும் லுங்கி அணிந்து வாகனங்களை ஓட்டக்கூடாது. அவர்கள் பேண்ட், சட்டை மற்றும் ஷு அணிந்துகொள்ள வேண்டும். இந்த விதிமுறையானது கண்டக்டர்கள் மற்றும் க்ளீனர்களுக்கும் பொறுந்தும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.