ராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது - சீமான் பதிலடி.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வான்வழித்தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.
சிங்கள இனவாதிகளுக்கு இடையேயானப் போட்டியில் எவர் வென்றாலும் அது தமிழர்களுக்கு எவ்விதப் பலனையும் தரப்போவதில்லை என்பதே மறுக்கவியலா உண்மை. இதனைத் தெளிவாக உணர்ந்தே அதிபர் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் எமது மக்கள்.
பிரபாகரன் களத்தில் நின்றபோதே அவரது முடிவை ஏற்று தேர்தல் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள் ஈழச்சொந்தங்கள்.
தற்போதும் அதனைப் போலவே, தேர்தலைப் புறக்கணித்து, இவ்வதிகாரம் எமக்கானதல்ல; எம்மை அடிமைப்படுத்தி ஆளுகிற அதிகாரத்தைத் தமிழர்கள் நாங்கள் அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதைக் கூறும் விதமாகப் புறக்கணிப்பு மூலமாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும், வடக்கு கிழக்கு மாகாண முதல்வர் பதவிக்கானத் தேர்தலிலும் பங்குபெற்று வாக்குச்செலுத்திய எமது உறவுகள் இத்தேர்தலைப் புறக்கணித்தமைக்கு அதுவொன்றே காரணமாகும்.
இலங்கையின் இரண்டாம்தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்பட்டு, சிங்களக்குடியேற்றங்களும், சிங்களமயமாக்கலும் வீரியம்பெற்று தமிழர்களுக்கெதிரான வன்முறைச்செயல்களும், அடக்குமுறைகளும் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது ஊக்குவித்து வளர்த்துவிடும் சிங்கள அரசியல் தலைமைகள் ஒருபோதும் தமிழர்களின் நலனையும், நலவாழ்வையும் விரும்பாது என்பதனைக் கடந்த கால நிகழ்வுகளிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.
இறுதிகட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கேட்டு குடும்பத்தாரும், உறவினர்களும் இன்றைக்கு வரை போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு ஒரு தீர்வினையும் சொல்ல மறுக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள்.
கோத்தபய ராஜபக்சே பதவியேற்றவுடனே தனக்கு வாக்களிக்காத தமிழர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவித்தாக்குதல் நடத்தத் தொடங்கி இருப்பதாக வரும் செய்திகளைப் பன்னாட்டுச் சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சுட்டிக்காட்டுகிறேன். தமிழர் தாயகத்தை முற்று முழுதாக சிதைத்தழித்து சிங்களமயக்காலின் மூலம் முழுவதுமாகத் தமிழர்களை அழித்தொழித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறியர்களின் ஒரே நோக்கமாகும்.
மற்றபடி, அவர்கள் ஜனநாயக ரீதியிலான நியாயமானத் தீர்வுகளுக்கு உடன்படத் தயாராக இல்லை என்பதைத்தான் அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் எடுத்துரைக்கிறது. குறைந்தபட்சம், வடகிழக்குப்பகுதியைத் தமிழர் தாயகமாக அறிவித்து 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி குறைந்தபட்ச அதிகாரத்தைத் தமிழர்கள்வசம் வழங்கக்கூட சிங்களப் பேரினவாதிகள் தயாராக இல்லை என்பதன் மூலம் அவர்களது இனவெறியையும், இன ஒதுக்கலையும் அறிந்துகொள்ளலாம்.
ஆகவே, உலகத்தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டுப் பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித்தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச்சமூகமும் ஏற்படுத்தித் துயருற்று இருக்கிற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.