சம்மாந்துறை அன்சார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மேற்பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு தனது அறிக்கையை கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையும் பரிந்துரைகளும் முஸ்லிம் சமூகத்தின் மீதான கடுமையான விதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடைசெய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளதுடன் இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய சிபாரிசுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மேற்பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவர்களும் இடம் பெற்றிருந்தோம் இக் குழுவினர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்ந்து பல முடிவுகளை எடுத்திருந்தனர் இக் குழுவில் நாங்களும் உறுப்பினர்களாக இருந்தும் எடுக்கப்படும் முடிவுகளில் எங்களிடம் எந்தவித ஆலோசனைகள் கேட்கப்படவுமில்லை எமது கருத்துக்களுக்கும் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படவுமில்லை.
இதிலுள்ள பல பரிந்துரைகள் முஸ்லிம் சமூகத்தை ஓர் இறுக்கமான கட்டமைப்புக்குள் உட்படுத்தும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன இது குறித்த நாங்கள் பல முறை தங்களது எதிர்ப்பை தெரிவித்து குறித்த அறிக்கையின் இறுதி வடிவத்தில் எவ்வித ஒப்பமும் இடுவதில்லை என்றும் முடிவெடுத்திருந்தோம் இருந்தும் எங்கள் இருவரிடமும் இறுதி அறிக்கை காண்பிக்கப்படாது, ஒப்பமும் பெற்றுக் கொள்ளப்படாது வெளியிடப்பட்டிருக்கின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மேற்பார்வை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் குழுவினரால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இறுதி முடிவானது அல்ல அது வெறும் பரிந்துரைகளே. முஸ்லிம் சமூகம் சார்ந்த கருத்துக்களை, பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காகவே அக் குழுவில் நாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டோம் அப்படியிருந்தும் எங்களிடம் முஸ்லிம் சமூகம் தொடர்பான விடையங்களில் கருத்துக்கள் கேட்டறியப்படாது, எங்களின் ஒப்பமேதும் பெறப்படாது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதானது வேறு ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை விடையத்தில் என் மீது திட்டமிட்டு விமர்சனங்கள் செய்யப்படுகின்றது என் மீது காழ்ப்புணர்வு கொண்ட பலர் இதனைப் பூதாகரமாக்கி அரசியல் இலாபம் காண்கின்றனர்.
எனக் குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, நிகாப் போன்ற ஆடைகள் தடைசெய்யப்பட வேண்டும் எனவும், பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்யவேண்டும். முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படவேண்டும் எனவும், 16 வயது பூர்த்தியானவர்களே மத்ரஸா கல்வியில் உள்வாங்கப்படவேண்டும். இன, மத, மற்றும் சமுதாய அடையாளங்களை வெளிப்படுத்துகிற பெயர்களுடன் கூடிய பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பதவியேற்றபோது ஆற்றிய கன்னி உரையில் அனைவருக்கும் மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார். இவ்வாறான நிலையில் அரசினால் நிறுவப்படும் குழுக்கள் கூட இனவாத செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றமையை அனுமதிக்க முடியாது. இவ்விகாரங்களில் ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.