கொரோனா நெருக்கடி ஆரம்பித்தநாளிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப் பிராந்தியத்திற்குள் வந்த 987 பேரில் தனிமைப்படுத்தலின் பின்னர் 984 பேர் விடுதலையாகியுள்ளனர். மேலும் மூவரே தனிமைப்படுத்தலிலுள்ளனர்.
இவ்வாறு கல்முனைப் பிராந்திய கொரோனா நிலைவரம் தொடர்பாகக்கூறிய கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
பணிப்பாளர் டாக்கர் சுகுணன் மேலும் தெரிவிக்கையில் ;
கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை ஆக இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இரண்டாந்தர தொற்றுக்கு ஆளாகியிருந்தார். இதேவேளை ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 81பேரில் 13பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 39பேர் தற்சமயம் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப் பிராந்தியத்திற்குள் வந்த 1846பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 1579பேர் விடுதலையாகியுள்ளனர். 267பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இதேவேளை எமது பணிமனைக்கு இன்வ்றாறெட் டிஜிட்டல் உடல்வெப்பமானிகள் 15 லண்டன் அகிலன் அமையத்தினால் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்று அவை 13சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளுக்கும் பொலிஸ்நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன எனறார்.