தலவாக்கலை தற்கொலை செய்ய முயன்ற யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் , ரிஸ்வானின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரிஷ்வானின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிகளை செய்தற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளதாக இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்ததாவது,
இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கையை வைத்துத்தான் பார்க்கப்படுகிறது. ரிஸ்வான் போன்றவர்கள் தன் உயிரைத் துச்சமாக எண்ணி பிறர் உயிரை காப்பதற்காக நீரில் மூழ்கி உயிரை இழந்துள்ளார்.
இனவாதம் பேசுபவர்கள் இவ்விடத்தில் ரிஸ்வானை பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். ரிஸ்வானை நற்பழக்க வழக்கத்தோடும் மனித நேயத்துடனும் வளர்த்த அவரின் பெற்றோருக்கே இந்த பெருமைச் சேரும்.
இவரின் பிரிவால் வாடும், மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் குடும்ப தலைவனை இழந்து தவிக்கின்ற இக்குடும்பதாரின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் உதவிகளை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.