Ads Area

தேர்தல் வெற்றிக்காக கொரோனா தொற்றுநோயை பாவிக்கும் அரசு - வைத்திய கலாநிதி சி. சிவமோகன் குற்றச்சாட்டு.

தேர்தல் வெற்றிக்காக கொரோனா தொற்றுநோயை பாவிக்கும் இந்த அரசு வைத்திய கலாநிதி சி. சிவமோகன் குற்றச்சாட்டு

ஒரு தேர்தலை முடித்து தங்களது அதிகார ஆசையை நிலை நிறுத்துவதற்காக  இந்த அரசு ஜனநாயகத்தை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுகிறது. 18-3-2020ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவித்தல் விடப்பட்டிருந்தது.  இந்தத் தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லை என்பது தெரிந்தும் அவசர அவசரமாக அந்த வேட்புமனுத்தாக்கலினை செய்து முடித்து விட வேண்டும் என்பதில்  அரசு உறுதியாக இருந்தது. 

அதன்  பின்புலத்தில் ரணில் மற்றும் சஜித்தின் உள்வீட்டு சண்டை மிகவும் சாதகமாக அமைந்தது.மக்களை நோக்கி உண்மையான தலைவர்களாக இருந்தால் தங்களது உள்வீட்டு சண்டையை நிறுத்தி கொரோனாவை நோக்கி போராடி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உள்வீட்டு சண்டையாக பிரிந்து நின்றார்கள். அந்த சாட்டை வைத்துக்கொண்டே பலாத்காரமாக எமது  மக்களிடையே தேர்தல் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இரண்டு நாட்களில் ஊரடங்கு சட்டமும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஏப்ரல் 20 இல் பல மாவட்டங்களில் இருந்த  ஊரடங்கு சட்டத்தினை தளர்தினார்கள்.
சுகாதார அதிகாரிகள் இந்த ஊரடங்கு சட்டத்தினை நிறுத்த வேண்டாம் என கூறினார்கள். அது தொடரவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. முக்கியமாக வட மாகாணம் அதை சொன்னது ஆனால் அதைக் கேட்கவில்லை அவர்கள் தேர்தல் திகதி குறிக்கவேண்டும் என்பதற்காக ஊரடங்கினை தளர்த்தி விட்டு நாடு நல்லது போல் காட்டிக்கொண்டு தேர்தல் திகதியினை குறித்தார்கள். அதன் பின்பும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

பின்பு ஜூன் 20 தேர்தல் திகதியை குறித்தார்கள். ஜனாதிபதியின் பிறந்தநாள் பரிசை வழங்குவதற்காக தேர்தல் திணைக்களம் செய்த கொடை இது சுதந்திர தேர்தல் ஆணையகமா இல்லையா என  கேள்விக்குறியாகவே உள்ளது.தேர்தல் திணைக்களத்தினை நேரடியாக குற்றம் சாட்டுகிறேன் உங்களுக்கு ஜனாதிபதிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்கான தேவையுள்ளதா ?.

மேலும் ஒட்டுமொத்தத்தில்அதிகார வேட்கை காரணமாக இந்த அரசு அனைத்து மக்களையும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகின்றதா என்ற கேள்வியும் இன்றும் இருக்கின்றது ஜனநாயக விழுமியங்களை தழுவியதாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் தவிர சர்வாதிகார ரீதியில் அரசியல் யாப்பு முறைகளை மீறி நடக்கக்கூடாது என்பதுதான் உண்மை.

கொரோனாவை வைத்து மிரட்டி மக்களை அதற்கு அடங்கிப் போகுமாறு கோருவது  ஜனநாயக மரபாக அமையாது. ஒரு ஜனநாயக மரபை ஏற்றுக்கொண்ட மக்களின் மீதான கட்டுப்பாடுகள் தான் உண்மையான கட்டுப்பாடுகளாக அமையும்.

புதிய பிரச்சார மரபுகளை பேண போவதாகக் கூறுகிறார்கள். செலவில்லையாம் புதிதாக ஒரு பிரச்சார மரபுகளாம் அறிமுகப்படுத்த போகின்றார்களாம். ஜனநாயகத்தினை கொலைசெய்து நீ டிவியை மட்டும் பார் நான் சொல்வதை மட்டுமே நீ கேள் பாராளுமன்றமே தேவையில்லை பிரச்சாரம் தேவையில்லை தேர்தல் கூட்டம் தேவையில்லை வீட்டை விட்டு வெளியே வராதே சொல்லும் தேதிக்கு மட்டும் வந்து வாக்கை போடு மூன்றிலிரண்டு எங்களுக்கு அனுமதி தா இதுதான் அவர்களது கோரிக்கையாக இருக்கின்றது. என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe