கடந்த மே மாதம் 21ஆம் திகதி மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணை நீர்த்தேக்கத்திலிருந்து உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தின் போது தனது உயிரைவிட்ட லிந்துலை, ரந்தனிகலவைச் சேர்ந்த ரிஸ்வானின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பம் வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக மத்திய மாகாண ஆளுநர் லலித்யூகம அந்த உதவித் தொகையை வழங்கியுள்ளார். அத்துடன், குறித்த பெண்ணைக் காப்பாற்ற உதவிய தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ருவான் பெர்ணாந்து மற்றும் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் செல்வராஜ் கந்தரூபன் ஆகிய இருவருக்கும் நினைவுப் பரிசில்களும் ஆளுநரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரட்னம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.