(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.ஏ நிசாம் செயல்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இதுவரை செயற்பட்டுவந்த எம்.கே.எம். மன்சூர் மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது;
2018 ஆம் ஆண்டு 10 மாதம் முதலாம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. எம். மன்சூர் நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் மூன்றாம் திகதி அவர் கடமையை பொறுப்பேற்றார்.
இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக எம். எல். ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆளுநராக கடமை பொறுப்பேற்றதையடுத்து 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம். ரி. ஏ. நிஷாம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் தன்னுடைய நியமனத்தை ரத்து செய்து புதிதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம். ரி. ஏ. நிஸாம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் 2019 இரண்டாம் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் அவரது சட்டத்தரணி ஊடாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் நடைபெற்றது.
இதனை ஆட்சேபித்து எம்.ரி.ஏ. நிசாம் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மாற்றப்பட வேண்டும் என்றும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது எனத்தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு சமர்ப்பித்திருந்தார்.
இதனை விசாரித்த இருவரடங்கிய நீதிபதிகள் குழாம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவை வழங்கி எம். ரி. ஏ நிசாம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு அனுமதியை வழங்கி உள்ளது.
நேற்றுமுன்தினம் வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக இன்னும் ஓரிரு தினங்களில் விரைவில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் எம்.ரி.ஏ.நிசாம் தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.