காரைதீவு நிருபர் - சகா.
கல்விப் பணியில் 29 வருடகாலம் நிறைபணியாற்றிய சம்மாந்துறை வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தரான ஆதம்பாவா அச்சிமொகமட்; இன்று (03) திங்கட்கிழமை தனது 60 வது வயதில் ஓய்வு பெறுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத்தொகுதியின் அமைப்பாளரான இவர் சம்மாந்துறை பிரதேசசபையின் உபதவிசாளராவார். ஜனாப் அச்சிமொகமட் அரசியலுக்கு அப்பால் சமய கலாசார சமுகத்துறைகளிலும் சமுதாயத்தில் பல கௌரவமான பதவிகளை வகித்துவருபவராவார்.
இவர் ஆரம்பக்கல்வியை பெண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்று 1992இல் ஆசிரியராக நியமனம்பெற்றார். 2008இல் வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தராக பதவியுயர்வுபெற்று ஓய்வுபெறும்வரை சிறப்பானபணியாற்றினார். இடையில் இருவருடங்கள் சுனாமி உணவு திட்டத்திலும் மேலதிகபணியாற்றினார்.
இதேவேளை கல்விப்பணிக்கு அப்பால் சமய சமுக அரசியல் துறைகளிலும் தடம்பதித்துள்ளார். அரசியலில் இயல்பாகவே நாட்டம்கொண்ட இவர் 2011இல் உள்ளுராட்சிசபைத்தேர்தலில் போட்டியிட்டு சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள்பணியாற்றினார். இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவருகிறார்.
சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த வருகின்ற முக்கியஸ்தராவார்.