கொரோனா காரணமாக 7 மாதமாக தடை செய்யப்பட்டிருந்த உம்ரா யாத்திரைக்கு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்கள் அனுமதிக்கப்படுவர் என சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது.
உம்ரா யாத்திரைக்கு மக்களை அனுமதிக்கும் திட்டத்தின் முதல் பகுதியில் அக்டோபர் 4 முதல் சவூதி குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் தினந்தோறும் 6000 பேர் என்ற வீதத்தில் உம்ரா யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர்.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 20,000 மக்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர் எனவும், அன்றிலிருந்து வெளிநாட்டுவாழ் மக்களும் உம்ரா யாத்திரைக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முஸ்லீம் மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உட்கட்டமைப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா பெருநோய் காலம் முடிவடைந்தவுடன் மீண்டும் வழக்கமான எண்ணிக்கையில் மக்கள் உம்ரா யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் எந்தப் பகுதியிலும் சவூதியின் மெக்காவில் நடைபெறும் இந்தப் புனித யாத்திரையில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து மக்கள் சவூதி வருவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரசு தற்காலிக தடை விதித்தது.
தற்போது உம்ராவுக்கான அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உள்ளநாட்டவர்கள் மற்றும் சவுதி குடியிருப்பாளர்கள் என 16 ஆயிரம் உம்ராவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.