சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள கல்லறை தோட்டம் ஒன்றில், முதலாம் உலகப் போரின்போது உயிரிழந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 102-வது ஆண்டு விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜித்தாவில் உள்ள கல்லறை தோட்டத்தில் முதலாம் உலகப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சர்வதேச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லறை தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் தீடீரென குண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
சவுதி அரேபியா ஜித்தாவில் உள்ள கல்லறை தோட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கத்தார் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டை கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.