Ads Area

இலங்கையில் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வின் வக்கிரங்கள்.

அண்மைய மஹர சிறைச்சாலை சம்பவத்திற்கு காரணம், சிறைக்கூடத்தில் இருந்த மாத்திரைகளை கைதிகள் பாவித்தமை தான் என அரச தரப்பால்  கூறப்பட்ட விளக்கத்தை  வெறும் அண்டப்புளுகு, ஆகாசப்புழுகு என இலங்கை  உளநோயியல் நிபுணர்கள் கழகம் (Sri Lanka College of Psychiatrists)தனது மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வந்த பெஹத், அண்டர்விய்ர் கருத்தடை, கொத்து ரொட்டி கருத்தடை, டாக்டர் சாபி'ஸ் கருத்தடை என்ற பெரும் பொய்களால் முழு நாடே அல்லோல கல்லோலப்பட்டிருந்த போது இவைகள் எல்லாம் பொய்கள், வெறும் கட்டுக்கதைகள் என ஏன் இலங்கை பெண் நோயியல், மகப்பேற்று நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Obstetricians and Gynecologists) அறிக்கைகள் ஏதும் விடவில்லை?

மாட்டிறிச்சி தான் புற்றுநோய் ஏற்படக் காரணம் என்று சங்கத்து வைத்திய தலைவர் சொன்ன போது, இல்லை இல்லை,  இது தவறானது. இது அடிப்படை இல்லாதது என்று ஏன் இலங்கை புற்றுநோய் நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Oncologist) உண்மையை தெளிவு படுத்தி அறிக்கைகள் ஏதும் வெளியிடவில்லை?

தண்ணீரினால் கொரோனா பரவும் என்றும், இறந்த உடல்களால் கொரோனா பெருகிப் பரவும் என்றும் வெறும் வதந்தியை, ஆகாசப் புளுகை நாட்டிற்குள்ளே அறிவிலிகள் கூட்டம் அவிழ்த்து விட்ட போது, இல்லை இல்லை இவைகள் எல்லாம் பச்சைப் பொய்கள்; அப்படி எல்லாம் நடக்காது என்று ஏன் இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் கழகத்தினர் (Sri Lanka College of Microbiologist) மறுப்பறிக்கைகள் ஏதும் வெளியிடவில்லை?

இதற்கெல்லாம் விடை ஒன்றே ஒன்றுதான். யாருமே கண்டும் காணாமல் இருந்ததற்கு காரணமும் ஒன்றே ஒன்றுதான். ஏனெனில் அவைகள் எல்லாம் ஒரு இனத்தின் மீதான காழ்ப்புணர்வின் வக்கிரங்கள். அவைகளில் சிலருக்கு நிறைய அரசியல் இலாபம் பார்க்க முடியும் என்பதைத் தவிர வேறேதும் இல்லை.

நாட்டு மக்கள் தவறாக வழி நடத்தப்படக் கூடாது, விஞ்ஞானமும், மருத்துவமும் அதன் அடிப்படைகளும் பொய்ப் படுத்தப்படக் கூடாது, யாருக்கும் பக்கச் சார்பில்லாமல் உண்மையை நடு நிலையாக உண்மையாகவே எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்திருந்தால் மேற்சொன்னவைகளுக்கும் மறுப்பறிக்கைகள் வந்திருக்கும். வந்திருக்க வேண்டும்.

யார் அறிக்கை விட்டாலும், விடாவிட்டாலும் ஒன்று மட்டும் எப்போதும் நிலையானது. இயற்கை ரொம்பவும் வினோதமானது. அது காலச்சக்கரத்தை சுழற்றிக் கொண்டே இருக்கும். விதைத்த பொய்களை முளையிலே வேரோடு பிடுங்கி விடாமல் சும்மா பார்த்துக் கொண்டிருந்த பாவம் ஒரு நாள் உங்களையும் சேர்த்து சூழ்ந்துகொள்ளும். அந்த நேரத்தில் அது பிடுங்க முடியாத பெரும் களையாக மாறியிருக்கும்.

அப்போது மற்றவர்களும் உங்களைப் போலவே இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்.

எங்களுக்கு வந்தால் அது  இரத்தம் உங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்பதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.

உங்களுக்கும் ஒரு நாள் இரத்தம் வரும் அப்போது மற்றவர்களும் இது தக்காளி சட்னி தானே என்று சொல்லியவாறே கடந்து செல்வர்.. அப்போது டூ லேட்

உளநோயியல் நிபுணர்கள் கழகம் வெளியிட்ட மறுப்பறிக்கையின் தமிழாக்கம்:

நடைமுறையில் பயன்படுத்தப்படும் மனநல  மருந்துகளின் துஷ்பிரயோகம்.

கடந்த சில நாட்களில், கைதிகளின் வன்முறை மற்றும் ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் மனநல  மருந்துகளின் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து ஊடகங்களில் கணிசமான அளவு விளம்பரம் (publicity) வழங்கப்பட்டது.

இந்த விளம்பரம் (publicity) மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் எந்தவொரு பகுத்தறிவு (rational basis) அடிப்படையுமின்றி உள்ளது என்பதை நாங்கள் கூற விரும்புகிறோம். இந்த மருந்துகளை மிகுந்த நன்மை பயக்கும் நோக்குடன்  பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தையும் நீக்குவதே எங்கள் நோக்கம்.

இலங்கையில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் மனநல மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 

இலங்கையில் மனநல மருத்துவர்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக நோயாளிகளுக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

இந்த மருந்துகள் எதுவும் வன்முறை அல்லது ஆக்கிரமிப்பு நடத்தைக்கு பொறுப்பல்ல. உண்மையில் இந்த மருந்துகள் பல அமைதியை ஊக்குவிக்கின்றன மற்றும் லேசான மயக்கத்தை or தூக்கநிலையை ஏற்படுத்துகின்றன.

ஆகவே, இந்த மருந்துகளின் சரியான பயன்பாடு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மனநோயைத் தடுப்பதற்கும் மகத்தான நன்மைகளைத் தருகிறது என்பதையும், எந்தவொரு ஆக்கிரமிப்பு அல்லது வன்முறை நடத்தையையும் ஏற்படுத்தாது என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி

"SRI LANKA COLLEGE OF PSYCHIATRISTS"

பிற்குறிப்பு:

இந்த இடத்தில் மனநல மருத்துவ College பிழையான அறிவிப்புகளை முறியடிக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டமையை பாராட்டியே ஆக வேண்டும்.

இதே நேரத்தில் மரணித்த உடலில் இருந்து virus நிலத்தடி நீர் ஊடாக பரவும், மரணித்த உடல்களை எரிக்க வேண்டும் என்று சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் அடித்து  விடும்போது இது சம்பந்தமாக நிபுணர்களான  "Sri Lanka College of Microbiologists" மெளனம் காப்பது வருந்தத்தக்கது.

நன்றிகள்.

Article By : 

Dr. Arshath Ahamed

Dr. ziyad Aia  



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe