இப்பேர்ப்பட்ட பிள்ளைகள் உருவத்தில் வளர்ந்தாலும் பால்குடி மறக்கும் வரைக்கும் மனதளவில் பக்குவம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்னும் சில பிள்ளைகள் சில காலம் வாய்க்குள் விரலை வைத்துக் கொண்டே திரிவார்கள். வேறு சிலர் வளர்ந்த பின்னரும் தாயின் முந்தானையையே பிடித்துக்கொண்டு, அவருக்குப் பின்னாலேயே சுற்றித் திரிந்ததாக கிராமப் பகுதிகளில் ஏராளம் கதைகள் உள்ளன.
முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமான, உருப்படியான, பக்குவப்பட்ட அரசியலைச் செய்யாமல் இன்னும் சிறுபிள்ளைத்தனமான அரசியலைச் செய்து கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளால் நிரம்பியுள்ள முஸ்லிம் அரசியலும் பால்குடிமறவா பிள்ளைகளைப் போலவே பல வேளைகளில் தோன்றுவதுண்டு.
பராயமடையாத அரசியல் என்றும் இதனைச் சொல்லலாம்.
இதற்கான காரணங்கள் மக்கள் அறியாததல்ல. இருப்பினும், இவ்வாறு கூறுவதற்கான மேலதிக காரணங்கள் என்னவென்பதை இக்கட்டுரையை வாசித்து முடிக்கும் போது நீங்கள் மேலும் புரிந்து கொள்வீர்கள். எனவே இங்கு, முஸ்லிம்களுக்கான அரசியல் பற்றிப் பேசுவதற்கு முன்னதாக பெரும்பான்மை மக்களினதும் சிறுபான்மை தமிழர்களினதும் அரசியல் பற்றி குறிப்பிட வேண்டியுள்ளது.
பெரும்பான்மை அஜந்தா
இலங்கையின் பெருந்தேசிய அரசியலின் அடிப்படை இயல்பில் கடந்த ஐம்பது வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. சிங்களப் பெரும்பான்மை நாட்டில் சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சர்வசாதாரணமானதே. ஆனால், இனவாத மைய அரசியல்தான் ஆபத்தானது. ஆனால் அது மிக இலகுவாக கூர்தீட்டக் கூடிய ஆயுதமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால் எல்லா ஆட்சியாளர்களும் அதனைக் கையில் எடுக்கின்றனர்.
இனவாதத்தின் மூலம் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ, அது சொல்கின்ற வேலையை அவர்கள் செய்ய மறுக்கின்ற வேளையில் இனவாதமே அவர்களுக்கு வினையாக வந்து முடியும் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இருப்பினும், இலங்கையில் சிம்மாசனமேறிய எல்லா ஆட்சியாளர்களும் வன் மற்றும் மென் இனவாதங்களை பயன்படுத்தியிருக்கின்றார்கள். சிலர் இதனை நேரிடையாகச் செய்தனர், சிலர் உட்கிடையாக செய்தனர் என்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை.
இன்று ஆளும் எதிரணியில் இருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர். இனவாதிகளுக்கு நொந்து விடாமல் செயற்படுவதில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பது யாரும் அறியாத ரகசியமல்ல. அதேவேளை, ராஜபக்சக்களாயினும் சரி, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மைத்திரி என எந்தவொரு பெருந்தேசிய தலைவராயினும் சரி அவர்களுக்கு ஒரு மறைமுக கூட்டு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது.
அதாவது சிங்கள மக்களின் நலன் என்று வருகின்ற போது அவர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றுகூடுகின்றனர்.
ராஜபக்ச குடும்பம் பெரும் ஊழலையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் செய்ததாக கூறி 2015 இல் ஆட்சியைக் கைப்பற்றிய ரணில் - மைத்திரி அரசாங்கம் அதற்கெதிராக குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட முடியாது. அவர்கள் முன்கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவும் இல்லை.
அத்துடன் இனவாதத்தை அடியோடு ஒழிக்கவும் இல்லை.
அதேபோன்று, மத்திய வங்கி பிணை மோசடி போன்ற பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ஆளும் பொதுஜனப் பெரமுண அரசாங்கமானது இன்றுவரை பிரதான குற்றவாளிகளை தண்டித்து, மோசடி செய்யப்பட்ட மக்களின் பணத்தை மீளப் பெறவில்லை. ஆனால், தேங்காய் திருடியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதை சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம்.
சமகாலத்தில், இனவாதமும் புதுப்புது பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றது.
கிள்ளுக்கீரை அரசியல்
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ரணிலை வசைபாடுகின்றார் என்பதற்காக, மற்றைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ராஜபக்சக்களை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக, இந்த பெருந்தேசியத் தலைவர்களுக்கு வக்காளத்து வாங்கும் முயற்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கிடையே முரண்பட்டுக் கொள்கின்றார்கள் என்பதற்காக நிஜமாகவே பெருந்தேசிய தலைவர்கள் தமது அஜந்தாவை நடைமுறைப்படுத்துவதில் பிளவுபடப் போவதில்லை.
மாறாக, ஒருவரையொருவர் தேவையான போது விமர்சித்து தேவையான சந்தர்ப்பத்தில் காப்பாற்றுவார்கள். அத்துடன் தமது அரசியல் இருப்புக்காக தமிழர்களையும், முஸ்லிம்களையும் கிள்ளுக்கீரையாக பயன்படுத்துவார்கள் என்ற யதார்த்தத்தை சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக முஸ்;;லிம் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் ஓரளவுக்கு இதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
எப்போதும் இரண்டாம், மூன்றாம் இடங்களில் ஓடிக் கொண்டிருப்பவனை விட முதலாம் இடத்தில் ஓடிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு பயம் இருக்கும். அதுபோன்ற பயமே சிங்கள தேசியத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை எந்த இடத்திலாவது, எவ்விதத்திலேனும் விஞ்சிவிடுமோ? என்பதே அந்த பயமாகும்.
இது இயல்பானதே என்றாலும் இதனை பெருந்தேசிய அரசியல்வாதிகள் இனவாதமாக உருமாற்றியிருக்கின்றார்கள். அத்துடன் மதவாதமும் முன்கையெடுத்துள்ளது என்பதே ஆபத்தானதாகும். எது எப்படியாயினும், பௌத்த மதத்தினதும் சிங்கள மக்களினதும் நலன் என்ற விடயத்தில் அவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள்.
கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் ஆட்சியாளர்கள் இரு சிறுபான்மை இனங்களுடனும் ஒருசேர, ஒரேகாலத்தில் முரண்பட்டது மிகக் குறைவு எனலாம். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்துடன் தோழமை பாராட்டிக் கொண்டே பெரும்பாலும் மற்றைய சிறுபான்மைச் சமூகத்திற்கெதிரான நகர்வுகளை மேற்கொண்டார்கள். இவ்விடத்தில், பொதுவான விவகாரங்களில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஒற்றுமை அவசியமாகின்றது.
தமிழரின் திட்டமிட்ட போக்கு
இதேவேளை, தமிழர் அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் மக்களும் நிறையவே படிப்பினை இருக்கின்றது. தமிழர் அரசியல் என்று வரும்போது அரசியல் செல்வாக்குள்ள ஆயுத இயக்கங்களை குறிப்பிடவில்லை. பல இயக்கங்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன. எனவே இங்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மட்டுமே கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில், முன்னொரு காலத்தில் ஆயுத இயக்கங்களாக அறியப்பட்ட அமைப்புக்கள் இன்று கூட்டணிகளாக ஒன்றிணைந்திருக்கின்றன. பெரும் போராளி எனக் கூறப்பட்டவர்களும் துரோகி என வர்ணிக்கப்பட்டவர்களும் அரசியலுக்குள் வந்திருக்கின்றார்கள்.
இதில் பெருந்தேசியத்திற்கு வால்பிடிக்கின்ற ஓரிருவரைத் தவிர மற்றெல்லா தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் சமூகத்தின் உரிமை, அபிலாஷை என்ற விடயத்தில் புள்ளியில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் அரசியல் குறிப்பாக கூட்டமைப்பின் நகர்வுகளின் ஊடாக இதுகால வரைக்கும் தமிழர்களுக்கு இனப் பிரச்சினைத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இன்னும் ஏட்டுச் சுரக்காயாகவே அது இருக்கின்றது. அதுபோலவே, உரிமை பற்றிப் பேசியதால் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு பெரியளவில் கிடைக்காமல் போயுள்ளது. இதுபற்றிய பல விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், இதையெல்லாம் தாண்டி தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். மிக முக்கியமாக, தமது உரிமைகள், அபிலாஷைகள் விடயத்தில் நிலைமாறாத நிலைப்பாட்டுடன் இருந்து, இதுவரைக்கும் அதற்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சுப் பதவிகளுக்காக அவர்கள் சோரம் போகவில்லை.
ஆனால் மேற்சொன்ன எந்தப் பண்பையும் முஸ்லிம் அரசியல் கட்டமைப்பில் காணக்கிடைக்கவில்லை கோத்தபாயவை தமிழ் அரசியல்வாதிகள் முன்னர் கடுமையாக விமர்சித்தார்கள். மஹிந்தவையும் அவர்கள் அவ்விதமே பார்த்தனர். அதனால், தமிழர்கள் இவ்வரசாங்கத்தை கடுமையாக எதிர்ப்பார்கள் என்றும், ராஜபக்ச அரசாங்கமானது தமிழர்களை வஞ்சிக்கலாம் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இரண்டும் நடக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் முன்னரை விட ஒருவித மென்போக்கை கடைப்பிடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் மிகவும் புத்திசாலித்தனமான முறையில் ஆட்சியாளர்களையும், தேசிய அரசியல் நிலைவரங்களையும் கையாள்வதாகவே தெரிகின்றது.
சர்வதேச அனுசரணையுடன் இனப் பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வைப் பெறுவதற்கான நிகழ்தவுகளை அதிகரிக்கும் ஒரு சூட்சுமமான அணுகுமுறையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எந்தளவுக்கு திட்டமிட்டுச் செயற்படுகின்றனர், எந்தளவுக்கு ஆவணங்களை கையில் வைத்திருக்கின்றனர், காய் நகர்த்தல்களை மேற்கொள்கி;ன்றனர் என்பதற்கு நிறையவே உதாரணங்கள் உள்ளன. இரா. சம்பந்தன் முதற்கொண்டு சாணக்கியன் எம்.பி. வரை பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரைகள் இதற்கு ஆகப் பிந்திய எடுத்துக் காட்டாகும்.
முஸ்லிம்களுக்கான அரசியல்
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தளபதிகள் மற்றும் எம்.பி.க்களிடத்தில் ஒற்றுமையோ, சமூகத்தின் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக கூட்டுத் திட்டமோ, போதுமான ஆவணங்களோ, ஆக்கபூர்வமான நகர்வுகளோ கிடையாது. அது எம்.எச்.எம்.அஷ்ரபோடு முடிந்து விட்டது போலவே எண்ணத் தோன்றுகின்றது.
பெரும்பாலான முஸ்லிம் எம்.பி.க்களின் உப்புச்சப்பற்ற பாராளுமன்ற உரைகளே இதற்கு நல்ல பதச் சோறாகும் (ஓரிவர் விதிவிலக்கு).
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் தொடங்கி, அளுத்கம கலவரத்தை பின்னணியாக வைத்தே 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2019 இல் தொப்பி போட்டு தாடிவைத்த பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களே புதிய அரசாங்கத்தின் வெற்றிக்கு பிரதானமாக வித்திட்டது.
இதற்கிடையில், ஹலால், அபாயா, மாடறுப்பு, மத்ரசா விவகாரம், முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துதல், முஸ்லிம் அரசியல்வாதிகளை நெருக்குதல் என எத்தனையோ பிரச்சினைகளை இனவாதிகள் பூதாகரமாக்கி விட்டுள்ளனர். ஆகவே, இன்றைய இலங்கை அரசியல் என்பது முஸ்லிம்களை மையமாக வைத்தே ஓடிக் கொண்டிருக்கின்றது என்றும் கருதலாம்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களிடத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிய கூட்டு நிலைப்பாடு இல்லை. இலங்கையில் ஒரு இனப் பிரச்சினைத் தீர்வோ அல்லது அதுபோல ஒன்றோ முன்வைக்கப்பட்டால் நமது முதலாம், இரண்டாம் நிலைப்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்துவடிவ ஆவணம் எதுவும் தயார்நிலையில் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால், ஜனாஸா எரிப்பு விவகாரத்திலும் ஆவணங்களை முன்வைத்து, காத்திரமான அரசியல் நகர்வை கூட்டாகச் செய்யாமையால் அந்த உரிமையும் மறுக்கப்படும் நிலை வந்துள்ளது எனலாம்.
உள்நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டிலேயே பேசித் தீர்க்க வேண்டும் என்றாலும், தமிழர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் அவர்களுக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளன. இருப்பினும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகங்களுக்கும் இடையில் அவ்விதமான உறவு கிடையாது என்றே கூற வேண்டும்.
இலங்கையில் எத்தனை முஸ்லிம் கிராமங்கள் உள்ளன? அதில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அதில் எவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது? முஸ்லிம் தனியார் சட்டத்தில் எதனை திருத்தலாம் எதனைத் திருத்தக் கூடாது?
முஸ்லிம்களிடையே உருவாகியுள்ள மத இயக்கங்களை முறைமைப்படுத்துவது எவ்வாறு? என்று அரசியல் தலைவர்களிடம் கேட்டால், உடனடியாக அவர்களால் பதிலிறுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
குறிப்பாக, இனப்பிரச்சினை தீர்வின் தெரிவுகளாக அமையக் கூடிய சமஷ்டி முறைமை பற்றியும் வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை பற்றியும் ஒரு எழுத்துமூல ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கூறினால், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் சரியாக தயாரிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்ட தரவுகள் இல்லை. அதுபற்றிய ஆழமான அறிவும் இல்லை. இவ்வாறான தரவுகளை தம்வசம் வைத்துள்ள மூன்று நான்கு பேர் இப்போது அரசியலில் இல்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்றால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதை ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். அது பற்றிப் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயங்கக் கூடாது. தாம் ராஜபக்சவுக்கு ஆதரவு என்றாலும் சஜித்துக்கு ஆதரவு என்றாலும், சமூகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அதில் காத்திரமான விதத்தில் முன்னிற்க வேண்டும்.
அதற்காக இனவாதம் பேசுதல் என்று அர்த்தமல்ல. முஸ்லிம்களின் நியாயத்தை சிங்களவர்களும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதத்தில் எடுத்துரைத்தலாகும்.
மக்களின் பிரச்சினை பற்றி அறிவதென்றால், முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டும். தமக்கு வரும் தெலைபேசி அழைப்புக்களுக்கு பதிலிறுக்க வேண்டும்.
விடிகாலை முதல் இரவு வரை சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும்.
பேஸ்புக் போராளிகளையும் தம்மைச் சுற்றியிருக்கின்ற 'ஆமா' போடும் கூட்டத்தையும் நம்பியிருந்தால், இந்த நிலை ஒருக்காலும் மாறாது. முக்களுக்காக உழைப்பவர்களே தேசியத் தலைவர்கள் என்ற அடைமொமிக்கு பொருத்தமானவர்கள்.
இதேவேளை, உலமா சபை போன்ற மத அமைப்புக்களும் சரியைச் சரியெனவும் பிழையை பிழையெனவும் கூறும் திடமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அதேபோன்று, பொன்னாடைக்காக அலையும் 'சமூக நலன் விரும்பிகள்', கௌரவ கலாநிதி பட்டத்தை நாடும் 'மேதாவிகள்' தொடக்கம், பல்கலை மாணவர்கள் உள்ளிட்ட படித்தவர்கள் வரை அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனைச் செய்வதற்கான வினையூக்கிகளாக, அழுத்தக் குழுக்களாக செயற்பட வேண்டும்.
பெருந்தேசிய அரசியலும் தமிழர் அரசியலும் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில், இன்னுமின்னும் பெருந்தேசியக் கட்சிகளுக்கு வால் பிடித்துக் கொண்டும் மற்றைய முஸ்லிம் அரசியல்வாதியை தூஷித்துக் கொண்டும்,
பராயப்படாத அரசியல் வழித்தடத்தில் காலத்தை கடத்துவதும், அதற்கு சமூகம் துணை புரிவதும் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு விடிவைக் கொண்டு வராது.
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி - 29.11.2020)