குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி மாளிகைக்காடு மக்களுக்கான இவ்வேலைத்திட்டத்தை அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை கையளித்தார்.
அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் ஏ. அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் செயலாளர் ஏ.அஹமத் றியாஸ், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், பேஸ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் (சஃதி) உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.