Ads Area

உண்ண உணவு கூட இல்லாது கஷ்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்தும் அரசாங்கம் வருமானம் பெறுகிறது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக எமது அயல் நாடான இந்தியா சுமார் 7000 விமானங்களை அனுப்பியிருக்கிறது.

ஏனைய நாடுகளும் இதே போன்று ஆயிரக்கணக்கான விமானங்களை அனுப்பியிருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து இதுவரையில் 10 விமானங்கள் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் தடுப்பூசி தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கம் எவற்றையும் கவனத்தில் கொள்ளவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் தவிர்ந்த , எமது அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகள் 2022 ஏப்ரல் மாதத்திலேயே எமக்கு கிடைக்கப் பெறும். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடே இதற்கு காரணமாகும்.

இவ்வாறான நிலையில் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்டு உக்ரைன் பிரஜைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் எவ்வித ஒழுங்குபடுத்தல்களும் இதற்காக முன்னெடுக்கப்படவில்லை.

அதன் காரணமாகவே சுற்றுலாப்பிரயாணிகள் எங்கு செல்கிறார் என்ற தகவல்களை சுற்றுலா சபை கூட அறிந்திருக்கவில்லை. அரச அதிகாரத்தையும் குடும்ப பின்னணியையும் பயன்படுத்தி தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவலும் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வெட்கப்பட வேண்டிய நிலைமையாகும்.

வெளிநாடுகளில் பல இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்து உண்பதற்கும் உணவு கூட இல்லாமலுள்ளனர். ஆனால் இவ்வாறானவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும் அவர்களிடமிருந்தும் அரசாங்கம் வருமானம் பெறுகிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏனைய நாடுகளில் சிக்கியுள்ள தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஆயிரக்கணக்கான விமானங்களை அனுப்பியுள்ளன. ஆனால் இலங்கை 10 விமானங்களை மாத்திரமே அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வீண் இழுத்தடிப்புக்களையே செய்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயம் தொடர்பான ஆய்வுகளில் தன்னை இணைத்துக் கொள்ளாமை கவலையளிப்பதாகக் கூறியுள்ளமையாகும்.

பொருளாதார ரீதியிலும் மாலைத்தீவு மற்றும் சோமாலியாவை விட கீழ் மட்டத்திற்கு இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe