Ads Area

லுலு யூசுப் அலியினால் இரத்தப்பணம் கொடுத்து மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட இந்தியர் 9 வருடங்களின் பின் விடுவிப்பு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லுலு குழும நிறுவனர் யூசுப் அலியினால் இரத்தப் பணம் செலுத்தப்பட்டு மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட இந்திய கேரளாவைச் சேர்ந்த 45 வயது நிரம்பிய சரவத்தாய் கிருஷ்ணன் பெக்ஸ் என்பவர் தற்போது சுமார் 9 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனது குடும்பத்தாரோடு சேர்ந்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு பெக்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காரை ஓட்டிச் சென்ற போது அந்தக் கார் சூடான் நாட்டுச் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான் இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

மரணித்த சிறுவனின் குடும்பத்தினர் மன்னித்தால் அவர் விடுவிக்கப்படுவார் என்ற நிலையில் சூடான் நாட்டு குடும்பத்தார் பெக்ஸ்சுக்கு மன்னிப்பு வழங்காமையினால் கடந்த 9 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இவரின் கஷ்டநிலை லுலு குழும நிறுவனர் யூசுப் அலி அவர்களின் கவனத்திற்கு வந்ததனையடுத்து யூசுப் அலி அவர்கள் சூடான் நாட்டு குடும்பத்தாரிடம் நேரடியாக பேசி பெக்ஸ்சுக்காக பரிந்துரை செய்து, அவர்களுக்கு 5 இலட்சம் திர்ஹம் இரத்தப் பணமும் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து சூடான் குடும்பத்தாரினால் மன்னிப்பு வழங்கப்பட்ட பெக்ஸ் தற்போது சுமார் 9 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு நேற்று கொச்சின் விமான நிலையம் ஊடாக இந்தியாவுக்கு வருகை தந்து தனது குடும்பத்தாரோடு இணைந்து கொண்டுள்ளார்.

இது குறித்து கூறிய பெக்ஸ்....“நான் தற்போது மறுபிறவி எடுத்து வந்துள்ளேன், எனது விடுதலைக்காக உதவிய லுலு குழும நிறுவனர் யூசுப் அலி அவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் யசூப் அலி இது குறித்து கூறுகையில்...“பெக்ஸ்க்காக மனிதாபிமான முறையிலேயே நான் உதவினேன், சிலர் கூறுவது போன்று நான் ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்தமைக்காக தொண்டு செய்யும் அடிப்படையில் அவருக்கு உதவவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடு திரும்பியுள்ள பெக்ஸ்சுக்கு லுலு நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் யூசுப் அலி.

செய்தி மூலம் - https://gulfnews.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe