Ads Area

கொரோனாவினால் கடந்த ஓராண்டில் இந்தியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டும் 30,071 பேர்.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டும் 30,071 பேர் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடப்பாண்டு ஜூன் 5 ஆம் தேதி வரை 30,071 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருப்பதாக கூறியுள்ளது. அதாவது, 26, 176 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாகவும், 3,621 பேர் அனாதையாக மாறியிருப்பதாகவும், 274 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டிருப்பதாகவும் அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் சுமார் 7,084 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 3,172 குழந்தைகளும், ராஜஸ்தானில் 2,482 குழந்தைகளும், ஹரியானாவில் 2,438 குழந்தைகளும், மத்தியப் பிரதேசத்தில் 2,243 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தில் 2,089 பேர், கேரளாவில் 2002 பேர், பீகாரில் 1,634 பேர் மற்றும் ஒடிசாவில் 1,073 பேர் ஆதரவற்ற குழந்தைகளாக உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆதரவற்றவர்களாக உள்ள 7,084 குழந்தைகளில் 6,865 பேர் ஒரு பெற்றோரை இழந்தவர்களாகவும், 217 பேர் அனாதையாகவும், 2 குழந்தைகள் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 226 குழந்தைகளை பெற்றோர்கள் கைவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒட்டும்மொத்தமாக 15,620 பேர் சிறுவர்கள், 14,447 பேர் சிறுமிகள், 4 பேர் திருநங்கைகள். இவர்களில் அதிகமானோர் 8 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (11,815பேர்). 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2,902 பேர், 4 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் 5,107 பேர். 14 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4,908 பேர். 16 வயது முதல் 18 வயது சிறுவர் சிறுமிகள் 5,339 பேர் ஆதரவற்றவர்களாக உள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி வரை இறுதி செய்யப்பட்ட பட்டியல் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், எஞ்சிய தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருப்பதாகவும் குழந்தைகள் உரிமை பாதுகாக்கும் தேசிய ஆணையம் கூறியுள்ளது.

பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற குழந்தைகளுக்கான கணக்கெடுப்பில் தனியார் அமைப்புகள் மற்றும் நபர்கள் ஈடுபடுவதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. குழந்தைகள் தத்துக்கொடுப்பதில் சிறார் நீதிச்சட்டம் 2015ன் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

Source - tamil.news18.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe