Ads Area

விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் கைத்துப்பாக்கி காங்கேயனோடையில் மீட்பு.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடையில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை( 23) மாலை  மீட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

காங்கேயனோடையிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படைப் படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி.தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் தேடுதலை மேற்கொண்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த குறித்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.

குறித்த காணிக்குள் துப்பாக்கியை வீசி விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe