பின்தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் எய்ட் இன் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்ட ஆய்வு கூடங்கள், நூல் நிலையங்கள் 26ம் 27ம் திகதிகளில் 06 பாடசாலைகளில் பாடசாலைச் சமூகத்தினரிடம் கைளிக்கப்பட்டன. அத்துடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
26ம் திகதி அன்று நடைபெற்ற நிகழ்வில் புல்மோட்டை மத்தியகல்லூரி விஞ்ஞான ஆய்வு கூடம் கையளிப்பும், ஜின்னாபுரம் முஸ்லிம் மகாவித்தியாலயம் நூல் நிலையம் மற்றும் 58 கற்றல் உபகரணப் பொதிகள் கையளிப்பும் சதாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் நூல் நிலையம் கைளிப்பும் நடைபெற்றன. இந் நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், முஸ்லிம் எய்ட் பணிப்பாளர், கல்வி நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மற்றும் முஸ்லிம் எய்ட் களப் பணியாளர்களுடன் பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
27ம் திகதி அன்று நடைபெற்ற நிகழ்வில், புடவைக்கட்டு முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் கையளிப்பும், 51 பாடசாலை உபகரணப் பொதிகள் வினியோகமும், குச்சவெளி விவேகானந்தா வித்தியாலயத்தில் 56 கற்றல் உபகரணப் பொதிகள் வினியோகமும் கும்புறுப்பிட்டி எம்டிஎம்எம்எஸ் பாடசாலையில் 52 கற்றல் உபகரணப் பொதிகள் வினியோகமும் நடைபெற்றன. இதில் திருமலை வலயக்கல்வி பிரதிப் பணிப்பாளர், முஸ்லிம் எய்ட் பணியாளர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பங்கேற்றனர்.
கொவிட் உட்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஒருவருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இப் பாரிய கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 20 பின்தங்கிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமல்ல, அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக் கொமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களும் பயன்பெற்றுள்ளனர். மேலும் ஐந்து பாடசாலைகள் நவீன மின்னியல் கற்றல் உபகரணங்களையும் பெற்றுப் பயனடைந்துள்ளன.