ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது கார் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து மற்றொரு கார் மூலம் ஒவைசி டெல்லிக்கு வந்துள்ளார். இத்தகவலை ஒவைசி தனது டுவிட்டரில் நேற்று தெரிவித்திருந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஒவைசி சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் இருவருக்கும் அவர்களது வீட்டிலும், அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.