காத்தான்குடியில் பலசரக்குக் கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 லீற்றல் பெற்றோலை காத்தான்குடி பொலிஸார் இன்று (12) செவ்வாய்க்கிழமை காலை கைப்பற்றியுள்ளனர்.
புதிய காத்தான்குடி பரீட் நகர் வீதியிலுள்ள பலசரக்கு கடையொன்றிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகலொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜ் தலைமையில் சென்ற பொலிஸார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோலை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவர் சென்று அங்கு பெற்றோலை வாங்கியதையடுத்து பொலிஸார் நடத்திய தேடுதலின்போது குறித்த கடையில் கலன்களில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்தமையும் தெரிய வந்துள்ளது.
இதன்போது 160 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் குறித்த பல சரக்கு விற்பனை நிலையத்தின் உரிமையாளரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பெற்றோலையும் கைது செய்யப்பட்ட நபரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செய்திக்கு நன்றி - மெட்ரோ நிவுஸ் (காங்கேயனோடை நிருபர்)