பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால், மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன், மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள பகுதிகளில் இவ்வாறு மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
கடும் வரட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை காரணமாக ஆற்று மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறால் ஒரு கிலோ 1,600, கணவாய் ஒரு கிலோ 1,800, செப்பலி (கோல்டன்) ஒரு கிலோ 900, மீசை பனையான் ஒரு கிலோ 600, மணலை மீன் 1,400 ரூபாய்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் மாளிகைக்காடு பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களின் வகைகள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
ஆற்றை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, இப்பகுதியில் கருவாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.