சம்மாந்துறை வாழ் முஸ்லிம் பெற்றார்களுக்கும் குறிப்பாக இளைஞர், யுவதிகளுக்குமான முக்கிய அறிவித்தல்.
அன்மைக்காலமாக எமது பிரதேசத்தில் பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் பெண் மாணவிகளை இலக்கு வைத்து. சில இளைஞர்கள் போக்குவரத்து விதிகளையும் மீறி மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பின்தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவு செய்வதுடன், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுப்பதாகவும் இதனால் தமது பெண் பிள்ளைகள் கல்வியைத் தொடருவதில் பாரிய கஷ்டங்களை எதிர்கொள்வதுடன், இவ்வாறான தீயசெயல்களினால் சில மாணவிகள் இடைநடுவில் தமது கல்வி நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளதாகவும் பெற்றோர்களும், நலன்விரும்பிகளும் எமது சபைக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவிடயமாக ஆராய்ந்த எமது நம்பிக்கையாளர் சபை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பொதுவான அறிவித்தல் ஒன்றை விடுப்பதாகவும் அதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கெதிராக பொலிஸாரின் உதவியுடன் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானித்துள்ளது.
எனவே, தயவுசெய்து இளைஞர்களாகிய நீங்கள் இவ்வாறான சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு எமது பெற்றோர்களினதும், எமது ஊரினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, பெண் மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதுடன், குறிப்பாக ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிந்தால் அவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி சமூகத்தில் அவர்களை நற்பிரஜைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதனையும் மீறி இந்நிலை தொடருமாக இருந்தால் சமூகம் என்ற ரீதியில் எமது சபை தேவையான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பிணக்குகள் தீர்ப்பு பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம் எஸ் அப்துல் மஜீட் தெரிவித்தார்.