குவைத் நாட்டின் ஜஹாரா மாகாணத்திற்கு உட்பட்ட நயீம் காவல் நிலையத்திற்கு குவைத் குடிமகனான இளைஞர் ஒருவர் நேற்று ஒரு விசித்திரமான புகாருடன் வந்தார். அந்த இளைஞன், விற்பனையாளர் தனக்கு போதை தாராத போலியான கஞ்சாவை கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும், தனது 300 தினார்கள் புகைந்து போனதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் புகாரில் கோருகிறார்.
அதை புகைத்து எவ்வளவு நேரம் இழுத்தும் நயா பைசா அளவு கூட போதை கிடைக்காததால், விஷயத்தை(கஞ்சா பொட்டலத்தை) திறந்து பார்த்தபோது, பெரும்பாலானா அளவு சாதாரண மரத்தின் இலைகள் தான் இருந்தது எனவும், இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, உடனடியாக அரசு வழக்கறிஞருக்கு தகவல் அளித்து, அவர்களின் அனுமதியுடன் விற்பனையாளரின் வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட பல போதைப்பொருள் பாக்கெட்டுகளை கண்டுபிடித்த போலீசார் கைது செய்ததுடன், அடுத்து நேரடியாக புகார்தாரரை காவலில் எடுக்க அவருடைய வீட்டுக்கு சென்றனர். மேல் நடவடிக்கைக்காக இருவரையும் குற்றவியல் விசாரணை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். உலகிலேயே போதைப்பொருள் வழக்கில் நஷ்டஈடு கேட்டு இதுபோன்ற புகார் அளிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும் புகார்தாரருக்கு இழப்பீடு ரொக்கமாக வழங்கப்படுமா அல்லது பொருளாக வழங்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
குவைத்தில் மது மற்றும் பொதை பொருட்கள் உள்ளிட்ட விற்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.