Ads Area

அப்பட்டமான பொய் கூறும் முஷாரப் எம்பி : ஒரு துண்டுக்காணியைக்கூட மீட்கவில்லை.

 (ஏ.எம்.ஹஸ்னி)


பொத்துவில் பிரதேச மக்களுக்களுக்காக ஒரு துண்டுக் காணியையேனும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  பெற்றுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.தாஜுடீன் தெரிவித்தார்.


பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


பொத்துவிலைப் பொறுத்தவரை செங்காமம், துக்வெல்ல, உடம்பன்குளம், தகராம்பெல, ஆமவெட்டுவான், கிராண்கோவை, சோனிகம உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் காணிப்பிரச்சினையுள்ளது. 


இப்பிரச்சினைகளெல்லாம் தீர்க்கப்பட்டுள்ளதா? அல்லது ஒரு துண்டு நிலத்தைக்கூட முஷாரப் எம்பியினால் விடுதலை செய்ய முடிந்ததா? எனப்பகிரங்கமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.


மண்மலை விடுதலை செய்யப்பட்டிருப்பதாகப் பேசுகின்றனர் மண்மலை பிரதேசத்தில் ஏதாவது அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றதா? மக்களுடைய குடியிருப்புக்காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றதா? அங்குள்ள மக்கள் அன்று அனுபவித்த அதே இன்னல்களை இன்றும் அனுபவித்துக்கொண்டே இருக்கின்றனர். 


இன்று அங்கு மலசலகூடம் கட்டிக்கொள்ள முடியாது. மக்கள் எல்லை வேலிகளை அமைத்துக்கொள்ள முடியாது. குடிநீருக்காக ஒரு கிணற்றைக்கூட நிர்மாணிக்க முடியாது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் அவ்விடத்தை சவாலுக்குட்படுத்துகின்றனர்.


இவ்வாறான நிலையில் பொத்துவில் பிரதேசத்தில் அபிவிருத்திகள் இடம்பெறுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். பொத்துவில் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு அபிவிருத்திப்பணிகளும் முஷாரப் எம்பியினால் செய்யப்படவில்லை. அபிவிருத்தி என்பது முஷாரப் எம்பியைப்பொறுத்தவரை ஒரு மாயை, அவர் இன்னும் மக்களை மடையர்களாக்கி பேஸ்புக்கில் கேவலமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார். 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் அது பொத்துவில் மக்களின் தாகத்தை தீர்த்ததொரு கட்சியாகும். அந்த வகையில், பொத்துவிலில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றனர். 


இங்கு தனிப்பட்ட ஒருத்தருக்காக வாக்குகளில்லை. மிகக்குறுகிய காலத்துக்குள்ளே இந்தக்கட்சி பொத்துவில் பிரதேசத்தில் அளப்பெரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இக்கட்சியின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இங்குள்ள மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கினர்.


இம்மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள் முஷாரபுக்கானதல்ல. இந்தக்கட்சி மிகக்குறுகிய காலத்திலேயே ஆற்றிய அளப்பெரிய சேவைக்கானது. 


அபிவிருத்தி செய்வது போன்று மாயை காட்டி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. கட்சிக்கும் பொத்துவில் மக்களுக்கும் துரோகமிழைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்வரும் தேர்தலில் பொத்துவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe