2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய மிகவும் கடினமான பொருளாதார நிலைமைக்கு மத்தியில் பாதிப்புக்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டம் தேசிய ரீதியாக நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுமார் 12157 ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் பிரதான நிகழ்வு நேற்று (05) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் முஹம்மது ஹனீபா அவர்கள் தலைமையில் சென்நெல் கிராமம் 01 விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து கொண்டு அரிசி விநியோகச் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ், உதவி பிரதேச செயலாளர் யூ.எல் அஸ்லம்(LLB),அம்பாறை மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரிஸ்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கிராம சேவகர்கள்,(!பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.