பாறுக் ஷிஹான்.
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக. இரவு நேரங்களில் சுமார் 9, 5, 4 அடி நீளமுடைய அதிகளவான முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
மேலும், இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிக்குடிச்சாறு உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும், தற்போது வேளாண்மை அறுவடை ஆரம்பமாகியுள்ளதனால் வயல் நிலங்கள், கால்வாய்களை அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளின் இரைக்குள்ளாகின்றது. இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகிறதுடன், முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள், எச்சரிக்கைப் பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியமுள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.