பாறுக் ஷிஹான்.
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரினால் மோதி விட்டு தப்பிச்சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டுமென கட்டளையிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதி வரை வழக்கினை கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது.
குறித்த வழக்கு திங்கட்கிழமை (10) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம், வாதங்களின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பேரிம்பராஜா பகிர்தன் (வயது-41) வயது மதிக்கத்தக்கவைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதி மறுவிசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய வைத்தியரின் வாகன அனுமதிப்பத்திரம் காலாவதியாகியுள்ளமை, அபாய நிலையில் வாகனத்தைச் செலுத்தியமை, மது போதையில் சென்றமை உள்ளிட்டவைக்காக ரூபா 80 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் மறு வழக்குத் தவணையில் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி பின்னணி
குடிபோதையில் இளைஞனை மோதித்தள்ளி தப்பிச் சென்ற வைத்தியர் கைது - கல்முனையில் சம்பவம்.
வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே வந்த வைத்தியர் செலுத்திச்சென்ற கார் மோதியதுடன், அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன், வைத்தியரும் கைதாகியுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்திச்சென்ற 28 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதே வேளை, குறித்த விபத்தினை கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்படுத்திய வெள்ளை நிற கார் தப்பிச்சென்று, அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டு, அதைச் செலுத்திச்சென்ற வைத்தியரும் கைதாகி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான 41 வயது மதிக்கத்தக்க வைத்தியர் எனக்கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்று வருவதுடன், விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த காரினைச் செலுத்திய வைத்தியருக்கு வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், குடிபோதையில் காரினைச்செலுத்தி வந்துள்ளமையும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில், கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.