பாறுக் ஷிஹான்.
பசுமை மீட்சிப்பயணம் எனும் நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின் செயற்பாடுகளைக் கௌரவித்து இன்று (29) கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய நிகழ்வில் அம்மாணவிக்கு "Brilliant Child Award" விருது வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம், பிரதி அதிபர் இ.றினோசா, உதவி அதிபர்களான எம்.ஆர்.எம் முஸாதிக், எம்.எச்.ஐ.இஸ்னத், யு.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா ஆகியோரின் பங்கேற்புடன் கல்முனை பிர்லியன் விளையாட்டுக்கழகத்தலைவர் எம்.எஸ்.எம்.பழில், கழகத்தின் தவிசாளரும் ஆரம்பப்பிரிவுப் பொறுப்பாசிரியருமான ஏ.சி.நழீம் ஆகியோருடன் சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி கற்று வரும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா. இவர், தனது 10 வயதிலிருந்து மாவட்ட, தேசிய, சர்வதேச மட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவப்பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
10 இலட்சம் நபர்களை இலக்காக்கொண்டு "சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தி வரும் “ஆசிய நாடுகளில் மிக வயது குறைந்த சிறுமி” என்ற சாதனையாளர் விருதுக்காக பரித்துரை செய்யப்பட்டுள்ளார்.
அந்த மின்மினி மின்ஹா சுயேற்சையான முறையில் கல்வி, நிருவாக உயரதிகாரிகளின் அனுமதியுடன் சுற்றுச்சூழல் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக இன்று எமது முன்னிலையில் விழிப்புணர்வு உரையினை மேற்கொண்டுள்ளார் என பாடசாலை அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், மின்மினி மின்ஹாவின் சிறப்புரை, மரநடுகை, பாடசாலை விளையாட்டுப்பிரிவிற்காக உபகரணங்கள் அன்பளிப்பு, இதர செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் என நிகழ்வுகள் சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.