Ads Area

சம்மாந்துறை பகுதியில் இரு மாதங்களுக்கும் மேலாகவும் வீணடிக்கப்படும் குடிநீர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

 பாறுக் ஷிஹான்.


மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இருப்புக்கு நீர் இன்றியமையாததாகும். குறிப்பாக, மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் மிகவும் அவசியமானது. பொதுவாக பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்குமிடையில் பரஸ்பர சம்பந்தமுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.


இந்த வகையில், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் உடங்கா எனுமிடத்தில் அம்பாறை - கல்முனை பிரதான வீதியின் ஒரு மருங்கில் 24 மணித்தியாலங்களாக சுமார் 2 மாதத்திற்கு மேலாகவும் குடிநீர் வீணடிக்கப்படும் சம்பவம் பதிவாகியுள்ளது.


கடந்த காலங்களில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதிப்புனரமைப்பின் பின்னர் சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான குடிநீர் குழாய் திருத்தப்பட்ட பின்னர் இவ்வாறு மேலதிக நீரை தினமும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு தினமும் வீணாக வெளியேற்றப்படும் நீர் அருகிலுள்ள வடிகானூடாக அருகிலுள்ள குளத்தினை நோக்கி சுமார் 2 கிலோ மீற்றர் வீணாக வெளியேற்றப்பட்டு கலக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


அத்துடன், சம்மாந்துறைப் பகுதியில் இன்னும் பல குடும்பங்கள் குடிநீரிணைப்பின்றி அல்லற்பட்டு வரும் நிலையில் இவ்வாறு வீணாக நீர் வெளியேற்றப்படுகின்றமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது நாட்டில் நிலவும் கடும் உஷ்ணத்தின் விளைவாக தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்காக நீரைப்பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் அடிக்கடி  நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இவ்வாறு வீணாக குடிநீர் வெளியேறிச் செல்வதை ஏன் அசமந்தமாகப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது என்பது தொடர்பில் பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.


இது தொடர்பில் உரிய தரப்பினர் கூடுதல் கவனஞ்செலுத்த வேண்டும். இல்லாவிடின், இவ்வாறு நீர் வீணாக வெளியேறிச் சென்றால் எதிர்காலத்தில்   நீர் குறைவடைவதுடன், நீருக்கான தட்டுப்பாடும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.


சில பிரதேசங்களின் குழாய்நீர் விநியோகத்தில் கசிவு சாதாரணமானதாகக் காணப்பட்டாலும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வீண் விரயம் பாராதூரமானது. குடிநீர் விநியோகக்குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வெடிப்புக்கள் ஏற்படுவது வழமையாகும். 


சில பிரதேசங்களில் அவ்வாறான வெடிப்புக்கள் ஏற்பட்டு மணித்தியாலக்கணக்கில் நாட்கணக்கில் குடிநீர் வீண்விரயமானாலும் அது தொடர்பில் பின்னர் கவனஞ்செலுத்தப்பட்டு  நிலைமை சீர் செய்யப்படும்.


ஆனால்,இவ்விடத்தில் அவ்வாறில்லை. இவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe