குவைத்தில் வேலைக்காக வருகின்ற வெளிநாட்டினருக்கான விசா ஸ்டாம்பிங் நடைமுறைகளுக்கு முன் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக இருக்கும் எச்.ஐ.வி ஆன்டிபாடி பரிசோதனையின் முடிவுகள் துல்லியமாகவும் தெளிவாகவும் இல்லாத சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணத்திற்கு மீண்டும் இரண்டு கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையிலும் தோல்வியடையும் விண்ணப்பதாரர்கள் குவைத்திற்குள் வாழ்நாள் முழுவதும் நுழையத் தடை விதிக்கப்பட்டு அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இது தொடர்பான புதிய உத்தரவை சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது அல்-அவாதி பிறப்பித்தார். தற்போது, வெளிநாட்டினருக்கான விசா ஸ்டாம்பிங் செயல்முறைக்கு முன்னர் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையின் போது பாலிமரேஸ் செயின் ரியாஷன்(PCR) பரிசோதனை மூலம் எய்ட்ஸ் கண்டறியப்படுகிறது. இருப்பினும் புதிய உத்தரவுபடி நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கூடுதலாக இரண்டு ஆன்டிபாடி சோதனைகள் மற்றும் PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் சி(மஞ்சள்காமாலை சி வகை நோய்) பரிசோதனையின் முடிவுகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையிலும் இந்த புதிய உத்தரவுபடி பரிசோதனைகள் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயின் தன்மையினை தீர்மானிப்பதற்கான மாற்று முறையாக PCR பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடிவு நோயின் தன்மையின் துல்லியத்தை கண்டறியவும், சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்வதன் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
(குறிப்பு: புரிதலுக்காக, குவைத் வருவதற்காக ஊரில் வைத்து நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை அல்ல, குவைத் வந்த பிறகு நிரந்தர விசா அடிக்கும் முன்னர் வெளிநாட்டினருக்கு குவைத்தில் வைத்து நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையினை இது குறிக்கிறது)