அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள், விமானி இருவர் மற்றும் பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர், 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் பேசினார். அகமதாபாத்திற்குச் சென்று சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்த துயரமான விபத்தை தொடந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்(SVPIA) தற்போது செயல்படவில்லை. அனைத்து விமான நடவடிக்கைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தின் சிவில் மருத்துவமனையின் மீதுதான் விமானம் விழுந்துள்ளது. இதில் கட்டிடத்தில் இருந்த மருத்துவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளன. விமானத்தில் பயணித்த சுமார் 133 பேர் வரையில் உயிரிழந்தனர் எனவும், இந்த விபத்தில் மற்ற பயணிகள் யாரும் உயிருடன் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர விமானம் விழுந்த இடத்தில் உள்ள எத்தனை பொதுமக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்ற தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. இந்த விபத்தின் பாதிப்புக்கள்,சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் வரும் மணி நேரங்களில் தெரிய வரும்.