Ads Area

கடந்த கால சுமைகளுடன் தான் ஸ்ரீலங்கன் இன்றும் வானில் பறக்கிறது!

மஹிந்த அரசின் ஏர்பஸ் கொள்வனவில் (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் ,100 கோடி மேலதிக கொடுப்பனவு) ஊழல் என நிறுத்தியது நல்லாட்சி அரசு, இரண்டிலும் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய மாதாந்தம் எட்டு இலட்சம் அமெரிக்க டாலர் தேவைப்படும் அதே வேளை தற்போது குத்தகைக்கு பெற்றுள்ள ஏர்பஸ் ஏ 330 விற்கு மாதாந்தம் 275ஆயிரம் மாத்திரமே செலுத்தப்பட வேண்டியுள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை பெருந்தெருக்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையை ஒரு டாலருக்கும் வாங்குவதற்கு எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களும் தயாரில்லை என பாடம் நடத்திய உஸ்தாத்மார்கள் திறைசேரியிற்கு அது சுமையாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த விமானத்தை ஸ்ரீலங்கன் குத்தகைக்கு கொள்வனவு செய்துள்ளது.


எமது தேசத்தின் விமான சேவை மீண்டும் எழுச்சி பெறுவதை மக்கள் எவ்வாறு ஆவலுடன் வரவேற்கிறார் கள் என்பதனை காண தனது கண்கள் கலங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தேசத்திற்கும் மக்களிற்கும் பாரிய இழப்புக்களை நஷ்டங்களை ஏற்படுத்திய சகல பொருளாதார கொலைகாரர்களும்  கூடிய விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும்  கடந்த காலங்களில் ஸ்ரீலங்கனில்  பணி செய்த ஒருவர் வார இறுதி விடுமுறையில் அவுஸ்திரேலியா சென்று திரும்புவதாகவும், ஒருவரின் செல்ல நாய் குட்டியை கொண்டுவர ஸ்ரீலங்கன் விமானமொன்று சிங்கப்பூர் சென்று வந்ததாகவும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன் ஹெட்டியும் நாடாளுமன்றில் தெரிவித்தார்.


ஏர்லங்கா விமானசேவையை அன்றைய சந்திரிக்கா அரசு 1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் விமானசேவையின் முகாமைத்துவத்திற்கு (43% பங்குகளுடன் 10 வருட சேவைக்கால உடன்பாட்டில் ) வழங்கி இருந்ததையும், பின்னர் 2005 பதவிக்கு வந்த மஹிந்த அரசு அந்த உடன்பாட்டை 2008 ஆம் ஆண்டு ரத்து  செய்ததோடு  மிஹின்லங்கா என மற்றொரு பட்ஜட் விமான சேவையை 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.


மேற்படி சகல நகர்வுகளின் போதும்  ஸ்ரீலங்கன் விமான சேவை பல்லாயிரம் கோடிகள் நட்டமடைந்த வரலாறும் இருக்கிறது.


எமிரேட்ஸிடமிருந்து 43% பங்குகளை இலங்கை மீளப் பெற்ற 2008 நிதியாண்டில் சுமார் 9288 பில்லியன் ரூபாய் இலாபமீட்டிய ஸ்ரீலங்கன் மீளப் பெறப்பட்ட பின் 2008-2015 காலப்பகுதியில் 128238 பில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கியது. 


பின்னர் நட்டத்தில் பாரிய இயங்கிய சகோதர மிஹின் லங்காவினையும் 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கனுடன் இணைத்து பலமான ஒரே சேவையாக இயக்குவதற்கு நல்லாட்சி அரசு முடிவு செய்தது, என்றாலும் விமான சேவை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கியதால் மீண்டும் அதனை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.


கடந்த ஆட்சிக் காலத்தில் நட்டத்தில் ஓட முடியாமல் மூன்று வருடங்களாக தரையிறக்கப்பட்டிருந்த மூன்று விமானங்களுக்காக மாதாந்தம் 9 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டி இருந்ததாக அமைச்சர் பிமல் தெரிவித்திருந்தார்.


2021 ஆண்டு மட்டும் சுமார் 4550 கோடி நட்டத்தில் இயங்கிய ஸ்ரீலங்கன் இலங்கை வங்கி மக்கள் வங்கியிடம் பெற்ற 100 கோடி அமெரிக்க டாலர் கடன்களை செலுத்த முடியாத நிலையில் இருந்ததது.


இந்த நிலையில் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானம் நீர்பாய்ச்சி  வரவேற்கப்பட்ட போது வைப்பர் வேலை செய்வதனை தன்னால் காண முடியவில்லை என ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது பங்கிற்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.


ஸ்ரீலங்கன் விமான சேவையின் வரலாற்றை அது வீழ்ச்சி கண்ட வரலாற்றுக் காரணிகளை கெளரவ அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.


நல்லாட்சி அரசின் போது நாடாளுமன்ற  அரசதுறை நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் "கோப்பா" எனும் பாராளுமன்ற குழுவின் தலைவராக இருந்த தற்போதைய அமைச்சர் சுனில் ஹந்துன் ஹெட்டி மிகவும் சிறப்பாக தனது பணியை செய்தவர் என்பதால் கோப்பாவின் கோப்புகளை இனி கட்டவிழ்பதில் தனது பங்கை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.


ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தாது அதன் பங்குகளை வெளிநாட்டு விமான சேவைகளுக்கு விற்பனை செய்யாது இலங்கை தேசிய கொடியை சுமக்கும்,  சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அபிமானமிகு தேசிய சேவையாக மீளக் கட்டி எழுப்பும் முடிவை தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்துள்ளமை வரவேற்கத் தக்கது.


என்றாலும்,  திறைசேரியின் தலையீடு அல்லது பகுதியளவில் தனியார் மயமாக்கல் இன்றி (சர்வதேச விமான சேவைகளுடன் வர்த்தக போட்டா போட்டியில்)  தேசத்தின் அபிமான அடையாள விமான சேவை ஸ்ரீலங்கன் கட்டி எழுப்பப்படுவது அதிகரித்த சவால்மிகு கைங்கரியமாகும்.


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

06.06.2026





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe