பாறுக் ஷிஹான்.
திருக்கோவில் பிரதேசத்தில் நீண்டகாலம் நிலவி வரும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக்கொள்ள தவிசாளர் சசிகுமார் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கால்நடை உரிமையாளர்களுடன் திருக்கோவில் பிரதேச சபை, திருக்கோவில் பொலிஸ் நிலையம் மற்றும் திருக்கோவில் மிருக வைத்தியசாலை என்பன இணைந்து அண்மையில் (05) நடாத்திய கலந்துரையாடலின் போது திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 05 மாதங்களுக்குள் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால் 02 மரணங்களும் அதிகளவான பொருட்சேதங்களும் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
எனவே, கட்டாக்காலி மாடுகளை உரிமையாளர்கள் உரிய இடங்களில் கட்டி வீதிகளில் நடமாடுவதைத்தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருக்கோவில் பிரதேச சபைத்தவிசாளர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
அத்துடன், 2025.06.05 தொடக்கம் 2026.06.12ம் திகதி வரை திருக்கோவில் மிருக வைத்தியசாலையில் தங்களது மாடுகளை அடையாளப்படுத்தி அவற்றினை உடனடியாக சட்டரீதியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அவ்வாறு பதிவு செய்யப்படாத கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தண்டப்பணம் அறவிடப்படுமென்பதையும் 03 நாட்களுக்குள் மீட்க்கப்படாத கட்டாக்காலி மாடுகள் அனைத்தும் சட்டரீதியாக அரசுடமையாக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.